சமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு தோற்றம் தெரிகிறது. அரை மணி நேர செய்தியில் விளம்பர நேரம் போக ஒரு பதினைந்து நிமிடங்கள் மட்டுமே செய்திகள் வாசிக்கப்படுவதில் தற்போதெல்லாம் குறைந்தது இரண்டு கொலை மற்றும் திருட்டு விபத்து செய்திகள் மட்டுமே தவறாமல் இடம் பெறுகின்றன. இது எல்லாமே ஆட்சி மாற்றத்துக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் 2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் தினம் தினம் பற்றி எரிகின்ற போதும், உச்சக்கட்ட நெருப்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் மகளும் எம்.பியுமான கனிமொழி கைதாகி தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்ட போதும் அதை பற்றி ஒரு வரி செய்தி கூட சன் தொலைக்காட்சியின் செய்திகளில் வருவதில்லை. பூனை கண்களை மூடிவிட்டால் உலகமே இருண்டு விட்டதாக நினைக்குமாம். அது போல் தான் இதுவும்.
இம்மாதிரி முக்கிய விஷயங்கள் எதுவும் வராமல் அங்கு 100 பவுன் கொள்ளை. இங்கு ஒருவர் கொலை, இருவேறு விபத்துகளில் என்று என்னமோ இதுநாள் வரை தமிழகத்தில் எங்குமே திருட்டோ கொள்ளையோ நடக்காதது போல் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறார்கள். என்ன நியாயமோ என்ன தர்மமோ. ஆளுக்கொரு சானல் வைத்துக்கொண்டு ஒன்று அறிக்கை வசிப்பது போல் (ஜெயா டி.வி.) அல்லது மூச்சுக்கு முன்னூறு தடவை காப்டன் காப்டன் என்று காப்டன் டி.வியில் (வடிவேலு சொன்னதுபோல் எதற்கு காப்டனாக இருந்தாரோ) வெறுப்பேத்துகிறார்கள். நல்ல வேலை வசந்த் டி.வி., சிலம்பு டி.வி எல்லாம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. இல்லையென்றால் அவ்வளவுதான்.
அதே போல் ஒவ்வொரு கட்சி ஆட்சிக்கு வரும் போதும் என்னமோ அரசை குத்தகைக்கு எடுத்தது போல் ஆளும் கட்சி அதரவு/நடத்தும் டி.வி. சானல்களுக்கு மட்டும் முதலமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பேட்டி கொடுப்பது, அரசு விளம்பரங்கள் அதிகம் கிடைப்பது என்று இந்த சானல் தொல்லைகள் தாங்க முடியவில்லை.
ஒரு காலத்தில் தூர்தர்சன் அரசாங்க செலவில் செய்து கொண்டிருந்த சேவையை (சோப்பு போடுவதை) இப்போது தனியார் தொலைகாட்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசு தொலைகாட்சிக்கும் தனியார் தொலைகாட்சிக்கும் இது தான் வேறுபாடு. நமக்கு உண்மையை தெரிந்து கொள்ள கால விரயம். அதாவது இரண்டுக்கு மேற்பட்ட தொலைக்காட்சியை பார்த்தால்தான் உண்மையை தெரிந்து கொள்ள முடிகிறது.
.
0 comments:
Post a Comment