Wednesday, December 28, 2011

இலங்கை வாழ் தமிழர் வரலாறு - பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பகுதி 2

0


அவை மட்டுமோ, தன் இராச்சியத்தில் கிடைக்கும் திறமையான முத்துக்களையும் பரிசாக ஈந்தான். அன்றியும் யான் விரும்பியவண்ணம் ஆதாம் மலைக்கு யாத்திரைசெய்ய உதவியுஞ் செய்தான்” இபுன்பத்தூத்தாவின் கூற்றின்படி ஆரியச்சக்கரவர்த்தியின் தலைநகரம் “புத்தல” என்பதாகும். சரித்திர ஆசிரியர் பலர் இதனைப் புத்தளம் எனக்குறிப்பர். ஆனால். இவன் ஆதாம் மலைக்குப்போகும் பிராயாணத்தை விரித்துக்கூறுமிடத்து. “புத்தல” என்னுமிடத்திலிருந்துபாதை மூலம் ஆற்றைக்கடந்து மன்னாருக்குச் சென்றதாகவும் அதன்பின் சிலாபத்தை அடைந்ததாகவும் கூறுவான். ஆகவே “புத்தல” வென்பது புத்தளமாக இருக்கமுடியாது. “சிங்கை நகர்” எனக் கூறப்படும் வல்லிபுரக்குறிச்சிக்கு அணித்தாயுள்ள “புட்டளை” என இப்போது வழங்கும் கிராமமே இப் “புத்தல” வாகவிருக்கலாம். மேலும் இவ்வரசபரம்பரையினரைச் சிங்கையாரியச்சக்கரவர்த்திகள் என்றும் குறிப்பான். புட்டளை சிங்கையின் ஒருபகுதி. சிங்கையென்னும் பகுதி கி. பி. மூன்றாம் நூற்றாண்டளவில் கீர்;த்திவாய்ந்த இடமாயிருந்தது. இதற்குச் சான்று வல்லிபுரத்திற் கண்டெடுக்கப் பட்ட பொன்னேட்டுச்சாசனம். அன்றியும் அங்கு பல கட்டிடங்களும், கோட்டை கொத்தளங்களும் அழிந்தொழிந்து மண்ணால் மூடப்பெற்றிருப்பதை இன்றும் அங்குச் செல்வோர் காணலாம். அத்துடன் இதனருகே ஒருபெருந்துறையுமுளது. அங்கிருந்து கப்பல்கள் அக்காலத்தில் போக்குவரத்துச் செய்தன. இப்பொழுதும் அத்துறையைக் கப்பற்றுறையென அழைப்பர்.

பதினாலாம் நூற்றாண்டு முற்பகுதி தொடக்கம் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை சிங்கள அரசின்நிலை தலைகீழாயிருந்தது. இக்காலப்பகுதியில் சி;ங்களவரசின் தலைநகரம் அடிக்கடி இடத்துக்கிடம் மாற்றப்பட்டுவந்தது.

தென்னிந்தியப் படையெடுப்புகட்குப் பயந்து சிங்கள அரசர் அநுராதபுரப்பகுதியைக் கைவிட்டனர். அதனால் பொருள் வருவாயைக் கொடுத்த அப்பகுதியிலுள்ள நெல்வயல் முதலியன பாழடைந்தன. இதேகாலத்து அராபியவணிகர், காலிதொடக்கம் புத்தளம் வரையுள்ள சில இடங்களைத் தமது வணிகத்திற்கு நிலைக்களனாக ஆக்கிக்கொண்டனர். காலி, வெருவலை, கொழும்பு ஆகிய இடங்கள் அராபியரின் வணிகத்திற்குமிக முக்கிய இடங்களாக விளங்கின. அதனால், விவசாயத்துறையில் போதிய வருவாய் அற்றிருந்த சிங்கள அரசர், இவ்வணிகத்தைப் பயன் படுத்தி அராபிய வணிகருக்கு வேண்டிய கறுவா முதலிய பொருட்களை விற்பதற்காகத் தலைநகரைத் தென் மேற்குக் கரையோரமாக நிறுவினர். இதன் பயனாகப் பாணந்துறை, கொறளைப் பெருந்தெருவிலுள்ள இறாகம் கோறளை ஆகியவற்றிலிருந்து அரசர் சிலர் செங்கோலோச்சினர். இதன்பின் மூன்றாம் விக்கிரமவாகு காலத்தில் (கி. பி. 1357 - 1374) பேராதனையிலிருந்து அளகக்கோனார் என்னும் பெயருடைய சிங்களத் தலைவன் ஒருவன் செயவர்த்தனபுரத்தில் கோட்டை கொத்தளம் எழுப்பி ஒர் அழகிய நகரைக் கட்டினான். கி. பி. 1348ல் பாப்பரசரின் தூதன் மரிக்குநெல்லி 6 என்பாள் சீனத்துக்குச் சென்று இலங்கைவழியாக உரோமபுரிக்குத் திரும்புகையில் கொழும்பில் வந்திறங்கினான். அப்பொழுது அளகக்கோனார் கட்டியெழுப்பிய மாளிகையைக் கண்டு அதன் அமைப்புச்சிறப்பினை வியந்தான்.

அப்போது இலங்கையின் அரசியலமைப்பில் இருந்த தலைதடுமாற்றம் அக்கால வரலாற்றைக் கூறும் சிங்கள சரித்திரநூல்களிலும் பிரதிபலிக்கின்றது. எந்தச் சரித்திர நூலாவது இக்கால வரலாற்றைத் தெளிவாகக் கூறுவதாகத் தெரியவில்லை. அன்றியும் ஆரியச்சக்கரவர்த்தி பரம்பரையினரின் ஆட்சியில், இக்காலப்பகுதியதிலே, தமிழரசு மிகுந்த உச்சநிலையை அடைகின்றது. படிப்படியாகத் தமிழரசர் தங்கள் நாட்டெல்லையைப் பெருப்பித்து இலங்கையின் பெரும்பாலான பகுதியை ஆளத்தொடங்குகின்றனர்.

அன்றியும் தங்கள் அதிக்கத்தைச் சிங்கள ஆட்சிக்குக் கீழிருந்த பகுதிகளிலும் செலுத்தக்கூடியதாயிருந்தது. சிங்கள அரசனிடமிருந்து திறைபெறவுந் தொடங்கிவிட்டனர். அராபிய வணிகருடன் நடக்கும் கறுவாவணிகத்தில் பங்கெடுத்துக்கொள்ள நீர்கொழும்பு, வத்தளை முதலிய ஊர்களைப் பிடித்து அவற்றைச் சிலகாலம் தமது ஆதிக்கத்தில் வைத்திருந்தனர்.

ஒருமுறை தமிழரசின் வரி வாங்குவோர் சிலர் வரி வாங்கிய போது சிங்களச் சிங்காசனத்தில் கண்வைத்திருந்த அளகக்கோனார். இத்தருணத்தைப் பயன்படுத்தி இவ்வரிவாங்குவோரைப் பிடித்துத்தூக்கில் இடுவித்துக் கொன்றான். இதையறிந்த ஆரியச்சக்கரவர்த்தி சீற்றங்கொண்டு இரு பெருஞ் சேனைகளைச் சிங்கள அரசிற் கெதிராய் அனுப்பினான். ஒருபடை கரையோரமாக வந்து பாணந்துறையிற் பாடிபோட்டது. மற்றது பன்னாகம் (மாத்தளை) வழியாகக் கோட்டை நகர் நோக்கிச் சென்றது. கொழும்புக் கண்மையிலுள்ள கோட்டை, பாணந்துறை, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் தமிழப்படைக்கும் சிங்களப்படைக்குமிடையில் பெரும்போர் நிகழ்ந்தது. கோகாலைக் கண்மையிலுள்ள கோட்டகமக் கல்வெட்டு இப்போரை மேல்வருமாறு குறிக்கும்.

கங்கணம் வேற்கண்ணிணையாற் காட்டினார் காமர்வளைப்
பங்கயக் கைமேற் றிலதம் பாரித்தார் - பொங்கொலிநீர்ச்
சிங்கைநக ராரியனைச் சேரா வனுரேசர்
தங்கள் மடமாதர் தாம்.
இதன்படி இங்கு நடந்த போரில் தமிழப் படையே வெற்றிகண்டதெனத் தெரிகின்றது.

இவ்வாறு யாழ்ப்பாணத்தரசு வெற்றியோடு விளங்கியகாலத்து அதற்கும் விசயநகரப்பேரரசுக்குமிடையில் நல்லுறவு இருந்து வந்தது. இந்நிலையில் ஆறாம் பராக்கிரமபாகு என்பான் (கி. பி. 1412 - 1418) சிங்கள அரசுகட்டிலேறியதும் நிலைமை ஒருவாறு மாறத்தொடங்கியது. மங்கு திசையிலிருந்த சிங்களவரச இவ்வரசன் கீழ்த் தலை தூக்கத்தொடங்கியது. இலங்கை முழுவதையும் தனிச்சிங்கள இராச்சியமாக்க விரும்பினான். இக்குறிக்கோளோடு வேண்டிய ஏற்பாடுகளைப் படிப்படியாகச் செய்து கொண்டு வந்தான். தமிழரசன் வலியையுந் தனது வலியையும் செவ்வனே நோக்கித் தகுந்த தருணத்தில் போர் தொடுக்க வேண்டுமெனக் காத்திருந்தான். தன் வளர்;ப்பு மகனாகிய செண்பகப்பெருமாள் என்னும் சப்புமல்குமரையனைப் படையொன்றுடன் தருணம் பார்த்து யாழ்ப்பாணத்தரசனுக் கெதிராக அனுப்பினான். நடந்த போரில் அவன் தமிழரசனால் முறியடிக்கப்பட்டான். இதனால் பராக்கிரமபாகுவின் எண்ணம் கைகூடாது போயிற்று. சிறிதுகாலத்தில் இரண்டாம் முறையும், குமரையன் தமிழரசன் மீது படையெடுத்துச் சென்றான். இப்போரில் யாழ்ப்பாணத்தரசன் தோற்றான். அவன் தோற்றதற்கு, அவனுக்குதவக்கூடிய விசயநகர மன்னன் வராததும் ஒரு காரணமாகும். வெற்றி கொண்ட குமரையன் அக்காலத்து யாழ்ப்பாணத் தலைநராகிய சிங்கைநகரைக் கைப்பற்றி அதைக் கொள்ளையடித்து அழித்தான். அன்ற சிங்கையாரியனென யாழ்ப்பாண வைபவமாலை கூறும். கனகசூரியன் தென்னிந்தியாவிற்கு ஒளித்தோடினான்.

இவ்வாறு வெற்றிக்கொடி நாட்டிய குமரையன் பழைய இராசதானியாகிய சிங்கை நகரை விடுத்து, பாணன்கட்டிய யாழ்ப்பாணத்திற்கு அணித்தாயுள்ள நல்லூரிலே புகுநகர் ஒன்று கட்டினான். அங்குக் கந்தவேளுக்கு ஒரு கோயிலும் கட்டியெழுப்பினான். இன்றும் நல்லூர்க் கந்தசாமிகோயிற் றிருவிழாநாளில் உற்சவமூர்த்தி வீதிவலம் வரும்போதும், திரும்பிக் கோயிலினுட் புகும்போதும் கூறப்படுங் கட்டியங்களில் இவனுடைய பட்டத்துப் பெயராகிய “ஸ்ரீ சங்க போதி புவனேகவாகு” என்பதும் கூறுப்படுகிறது.

பிற்கால யாழ்ப்பாணத்தரசர்

குமரையன் யாழ்ப்பாணத் தமிழரசை ஆண்டுவந்த காலத்தில் கோட்டை இராச்சியத்தின் நிலைமை மாறிக்கொண்டுவந்தது. ஆறாம் பராக்கிரமவாகு இறந்ததும் அவனுடைய பேரப்பிள்ளையாகிய சயவாகு பட்டத்திற்கு வந்தான். அவன் ஒன்றரை ஆண்டுகள் ஆண்டபின் இறந்தான். அப்பொழுது அவன் உடன்பிறந்தாளாகிய மாணிக்கம் என்பாள் அரைப்பித்தனாகிய தன்மருகளை அரசுகட்டிலேற்றினளென டீ. கூட்டோ என்னும் போர்த்துக்கேயச் சரித்திராசிரியன் கூறுவான். ஆனால் இவன் அரசாளுந்திறன் அற்றவனெனக்கண்டு பெரிதுங்கவலையுற்று. அந்நாட்களில் வாழ்ந்த அரசகுமாரருட் பெருவலி செறிந்தவனாகிய குமரையனை உடனே வந்து அரசபொறுப்பை ஏற்கும் வண்ணம் வேண்டினள். இதை யறிந்ததும் குமரையன் யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டை நகர் நோக்தகிப் புறப்பட்டான். அங்குச் சென்றதும் புவனேகவாகு என்னும் பட்டப்பெயருடன் அரசுகட்டிலேறினான். எனினும் இவன் கோட்டைக்குச் சென்ற பிறகும் சிங்களப்பகுதியில் உள்நாட்டுக் கலகம் மலிந்து கிடந்தது.

யாழ்ப்பாணத்தில் அடங்கிக் கிடந்த தமிழரசு இக்குழப்பங்களைப் பயன் படுத்தியது. குமரையனால் கி. பி. 1450 - ல் முறியடிக்கப்பட்ட மன்னன் மகனாகிய பரராசசேகரன் (கி. பி. 1478 - 1519) யாழ்ப்பாண அரசைத் திரும்பப்பிடித்துத் தனிச் செங்கோலோச்சினான். (கி. பி. 1519 - 1561) அரசனானான்.

அக்காலத்திலே யாழ்ப்பாணம், மன்னார்க் கரைகளில் வந்து கரையேறிய கப்பல்களையும் அவற்றிலுள்ள பொருட்களையும், உரிமைப்படி யாழ்ப்பாண அரசர் எடுத்துக்கொள்வர். இவ்வழக்கத்தை யொட்டி அங்கு வந்தடைந்த பல போர்த்துக்கேயக் கப்பல்களைச் சங்கிலி கைப்பற்றினான்.

சங்கிலியின் இச் செயலைத் தடுப்பதற்காகக் கி. பி. 1543ல் மாட்டின் அல்பொன்சோ க சூசா என்பவன் போர்த்துக்கேய அரசின்கீழ் அடங்கியிருக்கும் வண்ணம் அவனைப் பணித்தான். கி. பி. 1544 ம் ஆண்டிற்கு முற்பட்ட சில காலங்களில் போர்த்துக்கேயரின் முயற்சியினால் மன்னாரில் வாழ்ந்த மக்களிற் சிலர் கத்தோலிக்கராய் மதமாறி வாழ்ந்தனர். கி. பி. 1544ம் ஆண்டு மட்டில அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் தூண்டுதலினால் மன்னார் மக்களுட் பெருந்தொகையானோர் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்டனர். இதையறிந்த சங்கிலி மன்னாருக்குப் படையனுப்பி மதம் மாறிய யாவரையுந் தண்டித்தான். இக் காலந் தொடக்கம் யாழ்ப்பாணத்தரசு போர்த்துக்கேயருக்கு எதிராகவே இருந்துவந்தது. சிங்கள நாட்டில் போர்த்துக்கேயருக்கு மாறான எழுச்சிகளின் முன்னணியில் நின்றவன் மாயாதுன்னை என்னும் சிங்கள அரசகுமாரன். இவனும் சங்கிலியும் போர்த்துக்கேயரை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்துகொண்டனர். 1547ல் சங்கிலி மாயாதுன்னையுடன் சேர்ந்து போர்த்துக்கேயருக்கெதிராகப் போர்புரிந்ததாகத் தெரிகிறது. இதற்கு இவரிருவரும் தஞ்சை அரசனான சேவப்பநாயக்கன் (கி. பி. 1532 - 1580) உதவியைப் பெற்றதாகவுந் தெரிகிறது.

கோட்டை அரசினை ஆண்ட எட்டாம் புவனேகவாகுவின் (கி. பி. 1521 - 1551) மருமகனான வீதியபண்டாரமென்பான் கோட்டை இரசாச்சியத்திற்கு அரசனாக ஆசைகொண்டான். ஆனால் தன்னெண்ணங் கைகூடாதது கண்டு பலப்பல இடங்கள் தோறும் சென்று உதவி கோரினான். எங்கணும் அவன் எண்ணங் கைகூடவில்லை. இறுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்டுகொண்டிருந்த சங்கிலி; செகராசசேகரனிடம் வந்து சேர்ந்தான்.

சங்கிலி போர்த்துக்கேயருக்கு மாறாகப் பொருதுகொண்டு நின்றானாகையால் வீதியபண்டாரத்தின் கோரிக்கைக்கு உடன்பட்டான். ஆனால் வீதியபண்டாரத்தின் திடீர்மரணத்தினால் போர்த்துக்கேயருக்கு மாறான இவ்வுடன்படிக்கை சிறிதும் பயன்படாது போயிற்று.

சங்கிலியைத் தண்டிக்கும் வகைதேடிக் காலம் பார்த்திருந்த போர்த்துக்கேயர் கி. பி. 1560 கொன்ஸ்தாந்தீன் தபிறகன்சாவின் 3 கீழ் கடல்வழியாக ஒரு பெரும் படையினை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினர். பிறகன்சா கொழும்புத்துறையில் இறங்கி நல்லூரையடைந்து சங்கிலியின் கோட்டை கொத்தளங்களை அழித்தான். இதைக் கண்ட சங்கிலி தன்மாளியையைத் தீக்கிரையாக்கிவிட்டுக் கோப்பாய்க்கு ஓடினான். அங்கும் போர்த்துக்கேயர் அவனைப் பின் தொடரவே வன்னிப்பகுதியில் போய் ஒளித்தான். அப்பொழுது தாம் புதிதாகக் கைப்பற்றிய யாழ்ப்பாணத்திலே போர்த்துக்கேயர் தலைவரும் அவர் அவர் சேனையும் வேட்டையாடுதல் விருந்தயருதல் முதலிய ஏகபோக சுகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அவற்றைக் கண்டு மனம் பொறாத நாட்டுமக்கள் அவருக்கு மாறாகப் புரண்டெழுந்து அங்கிருந்த போர்த்துக்கேயரை வெட்டி வீழ்த்திக் கலகம் விளைத்தனர். இத்தருணத்தைப் பயன்படுத்திச் சங்கிலிமன்னன் நல்லூர் வந்து சிதறுண்ட தன் படைகளைச் சேர்த்துப் போர்த்துக்கேயருக்கெதிராகப் பெரும்போர் நிகழ்த்தினான். இவ்வெதிர்ப்புக்கு நின்று பிடிக்க ஏலாது போர்த்துக்கேயர் கப்பலேறினர்.

சங்கிலிக்குப் பின் புவிராசபண்டார மென்பான். பரராசசேகரன் என்னும் பட்டப்பெயரோடு அரசுகட்டிலேறினான். அவனைப் போர்த்துக்கேயர் போரிலே கொன்று பெரியபிள்ளை என்பானை அரசுகட்டிலேற்றினர். அவன் பரராசசேகரன் என்னும் பெயருடன் கி. பி;. 1570ம் ஆண்டிலே போர்த்துக்கேயர் உதவியுடன் அரசு கட்டிலேறினானாயினும் அவனுக்குப் அவர்மேல் அடங்கிக் கிடந்த வெறுப்புணர்;ச்சி சிலவாண்டில் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. தஞ்சை மன்னனான அச்சுதப்பநாயக்கன் உதவியுடன் மன்னாரில் நிலைத்திருந்த போர்த்துக்கேயருக்கு எதிராகப் போர் தொடங்கினான். இப்போரில் இவன் வென்றதகாத் தெரியவில்லை.

இவனுக்குப்பின் புவிராசபண்டாரமென்பான் பரராசசேகரன் என்னும் பட்டப் பெயருடன் கி. பி. 1582ல் அரசனானான். இவனும் தன் முன்னோர் போலப் போர்த்துக்கேயரை எதிர்த்தான். மன்னாரை அவர் கையினின்றும் விடுவிக்க இருமுறை முயற்சித்துப் போர் நடத்தினான். இரண்டாம் முறையாக கி. பி. 1519ம் ஆண்டு மன்னாரைத் தாக்கியபோது போர்த்துக்கேயர் இவன் தாக்குதலைப் பொறுக்க முடியாது அந்திரே போர்த்தாடோ த மென்டோன்கா என்னும் தளபதியை யாழ்ப்பாணத்திற்குப் படையெடுத்துச் செல்லுமாறு கட்டளையிட்டனர். நடந்த போரில் பரராசசேகரன் இறந்துபட்டான். அப்பொழுது போர்த்துக்கேயர் பெரியபிள்ளை செகராசசேகரனின் மகனாம் எதிர்மன்னசிங்கனை அரசனாக்கினார். இவன் பரராசசேகரன் என்னும் பட்டப்பெயருடன் (கி. பி. 1519 - 1615) ஆட்சி செலுத்தினான்.

இவ்வரசன் போர்த்துக்கேயர் கைப்பொம்மையாக விளங்கினமை கண்டும். யாழ்ப்பாண அரசியல் அலுவல்களில் அவர் பெரும் பங்கெடுக்க விட்டமை கண்டும், மனம் பொறாத தமிழ்த்தலைவர்களான முதலிமாரும் தலைமைக் காரரும் மேற்படி நிலைமையை மாற்ற வழிவகை தேடினர். இந் நோக்கத்தைக் கொண்டு சோனகர், வடுகர், மறவர் ஆகியோர் உட்பட ஒரு சேனையைத் திரட்டிக்கெர்ணடு. தஞ்சைமன்னனாகிய அச்சுதப்பநாயக்கன் கண்டி மன்னனாகிய விமலதர்மசூரியன் ஆகியோரின் படையுதவியை நாடி நின்றனர். இத்திட்டங்களை ஏதோ ஒரு வகையாக அறிந்த எதிர்மன்னசிங்கன் மன்னாரிலுள்ள போர்த்துக்கேயத் தலைவனுக்கு அறிவித்தான். தஞ்சைநாயக்கன் கடற்படை மன்னாருக் கணித்தாய் வருகையில் போர்த்துக்கேயர் அதனை முறியடித்தனர். இதனோடு கலகம் அடங்கி எதிர்மன்னசிங்கன் கி. பி. 1615ல் இறக்கும்வரை அமைதி நிலவிற்று. அவன் இறக்குந் தறுவாயில் இருக்கும்போது மூன்று வயதுள்ள தன்மகனை அரசனாக்கி அவனுக்கு வயதுவரும்வரையும் தன் தம்பியாம் அரசகேசரி பண்டாரத்தை அரசபாதுகாவலனாய் நியமித்தான்.

எதிர்மன்ன சிங்கன் இறந்தபின்பு அரச குடும்பத்தினருள் ஒருவனான சங்கிலிகுமாரன் என்பான் அரசகேசரி பண்டாரத்தைக் கொன்று தானே அரசபாதுகாவலனானான். இச் செயலைக் குறித்துப் போர்த்துக்கேயர் எதிர்;ப்புக் கிளம்பிய பொழுது, அவருக்கு வேண்டிய திறையைக் கொடுத்து நாட்டை ஆள்வதாக வாக்குறுதி செய்தான். ஆனால் சிறிது காலத்தின் பின்னர் கண்டிக்குச் செல்லும் வடுகப்படையைத் தன் இராச்சியத்துக் கூடாகப் போக விடுத்ததாலும் தன் எண்ணப்படியே தன் மருமகனைத் தனக்குப்பின் அரசாள நியமித்ததாலும் போர்த்துக்கேயருக்கு முறைப்படி திறையைச் செலுத்தாததாலும், முன்கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் விட்டானெனத் தெரிகிறது. இதை யறிந்த போர்த்துக்கேயர் அவனை நெருக்கினர். அதனால், சிலகாலம் ஊராத்துறையில் ஒளித்திருந்தான். நெருக்கடியான இந்நிலையைக் கண்டு அவன் தேவியர் தஞ்சைப் பெருமன்னன் இரகுநாதநாயக்கனிடம் சென்று முறையிட்டனர். கேம்நாயக்கன் என்பான் தலைமையில் இரகுநாத நாயக்கன் அனுப்பிய தஞ்சைப் படையின் உதவிகொண்டு திரும்பவும் அரசைக் கைப்பற்றினான். இரகுநாதநாயக்கனே யாழ்ப்பாணம் வந்து போரிற் பங்கெடுத்துக் கொண்டதாகவும் கருதப்படுகின்றது. ஆனால் போர்த்துக்கேயர் வரலாற்று நூல்கள் இரகுநாதன் வருகை பற்றி எதுவுங் கூறிற்றில.

இன்னும் சங்கிலியின் அரச பரிபாலனத்தில் தமிழ் மக்கள் திருத்தியடைய வில்லை. அதனோடு தஞ்சை நாயக்கனின் உதவிப் பலத்தினால் போர்த்துக்கேயரை மதியாமலும் நடந்தான். போர்த்துக்கேயருக்கு மாறாகக் கண்டியரசனுக்கு உதவியளித்தான். அதனோடு போர்த்துக்கேயருக் கெதிராய் ஒல்லாந்தருடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினான். இதனால் சங்கிலி மீது சீற்றமும் ஆத்திரமும் கொண்ட போர்த்துக்கேயர் அவனை ஒழித்துக் கட்டப் பிலிப்பு த ஒலிவீரா என்னும் தலைவனின் கீழ் கி. பி. 1619ல் பெரும் படையொன்றை அனுப்பினர். சங்கிலியும் படை திரட்டினான். இரு படைகளும் பெரும்போர் நிகழ்;த்தின. எனினும் சங்கிலியின் படை தோற்கடிக்கப்பட்டது. சங்கிலி பிடிபட்டான். போர்த்துக்கேயர் சங்கிலியைக் கோவாவுக்கு அனுப்பினர். யாழ்ப்பாணத் தமிழரசு ஒலிவீராவின் கையிற் சிக்கியது. இதனோடு தமிழரசர் பரம்பரையும் முடிந்தது.

விடுதலைப் போராட்டம்

அரசபரம்பரை ஒழிந்தது. தன்மானம் என்னும் பெரிய தனத்தை இழந்து விட்டோமே யென்னும் மனப்பாரம் யாழ்ப்பாணத்து மகன் ஒவ்வொருவனது இதயத்தையும் அமுக்கியது. மதித்தற்கரிய மாணிக்கமாகிய சுதந்திரச் செல்வத்தை இழந்து விட்டோமே என்ற கவலை மக்களை வாட்டியது. விடுதலை வேட்கை பொங்கி யெழுந்தது. நாடு தொலைந்து பிறன் கைப்பட்ட ஈராண்டுக் கிடையில் ஆறுமுறை புரட்சி வெள்ளம் கான்யாறு போல் கரைபுரண்டோடியது. இதனைப் போர்த்துக்கேய வரலாற்றாசிரியரே கூறிப் போவார்.

முதல் முறை ‘கரையார்’ தலைவன் போர்த்துக்கேயருக் கெதிராய் படையோடெழும்பினான். நல்லூருக் கருகாமையில் நடந்த போர் ஒன்றில் ஒலிவீரா இவனை முறியடித்தான்.

அடுத்து, அரசகுமாரன் ஒருவனை யாழ்ப்பாணத்தரசனாக்க விரும்பி, சின்னமிக்கேல்பிள்ளை என்பவன் தஞ்சைக்குச் சென்ற ஆயிரம் போர்வீரரைப் பன்னிரண்டு தோணிகளில் ஏற்றி வந்து தலைமன்னாரை அடைந்து. அங்கிருந்து போர்த்துக்கேயரை எதிர்த்தான். ஒலிவீரா இம்முயற்சியையும் தோற்கடித்தான். பின்னர் முதலியார் ஒருவர் நடத்திய விடுதலைப் போரும் தோல்வியடைந்தது. சின்ன மிக்கேல்பிள்ளை தஞ்சை நாயக்கரிடம் திரும்பவுஞ் சென்று யாழ்ப்பாண அரசிற்குத் தன்னை அரசனாக்கும்படி வேண்டினான். தஞ்சைப் பேரரசின் கீழ் யாழ்ப்பாணத்தைக் கொண்டுவர ஆண்டு 1620 கார்த்திகைத் திங்கள் முயற்சிகள் தொடங்கின. யாழ்ப்பாணத்தையும் அடுத்துள்ள பகுதிகளையும் கைப்பற்றுவதற்குத் தஞ்;சைப்பெரும் படையொன்று வருவதாக ஒரு செய்தி நல்லூரிலிருந்த ஓலிவீராவின் காதுக்கெட்டியது. அந்தோனியோ த மோத்தாகல்வா ஒ என்பவன் கீழ் போர்த்துக்கேயப்படையொன்று பருத்தித்துறையில் தஞ்சை நாயக்கரின் படையைக் காத்;திருந்தது. நாயக்கரன் படை வந்ததும் பெரும் போர் நிகழ்ந்தது. மீண்டும் போர்த்துக்கேயர் கையால் தமிழர் சேனை முறியடிக்கப்பட்டது. இதுவே இலங்கைத் தமிழரின் கடைசி விடுதலைப் போராட்டம்;.

இதுகாறும் ஒருவாறு யாழ்ப்பாணத் தமிழரின் வரலாற்றைக் கூறினோம். இன்னும் திருக்கோணமலை மட்டக்களப்பு, வன்னி, மலைநாடு, முதலிய இடங்களில் வாழுந் தமிழர் வரலாற்றையும் இவ்வாறு ஆராய்ந்து வருகின்றோம். இவை யாவற்றையும் இறுதியில் ஒருங்குசேர்த்து இலங்கைத் தமிழர் வரலாறு என்னும் பெருநூலாக வெளியிடுதல் எனது நோக்கம். இந்நன்நோக்கத்துக்குச் சான்றுகள் தந்து உதவிபுரியும் அன்பர் தமக்கு ஆசிரியர் என்றும் கடப்பாடுள்ளவராய் இருப்பார்.

வாழ்க நற்றமிழ்

--------------------------------------

BIBILIOGRAPHY

கலிங்கத்துப்பரணி : பெ. பழனிவேல் பிள்ளை உரை@ கழகப்பதிப்பு 1950.

யாழ்ப்பாண வைபவமாலை: குல. சபாநாதன் பதிப்பு, சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு 1953.

Rama Bhadramba: Raghunathabhyudhyam. Ed. by. Dr. T. R. Chintamani. (Madras Uneversity)

Altekar, A. S.: Rashtrakutas and Their Times. Poona Oriental Book Agency, 1934

Annual Report of Epigraphy, Madras.
Archaeological Report of the Kegalle District H. C. P. Bell 
Bothligk and Roth: Sanskrit Worterbuch, St, Peter Sburg 1855

Ceylon Histroecal Journal
Codrington, H.C.: Short History of Ceylon, Macmillan & Cl,. London, 1926

Epigraphica Zeylanica

Geiger, Wilhelm: (1) Culavamsa, Pali Text Society, London, 1929 & 193 (2) Mahavamsa, Ceylon Government Information Department. Colombo 1950

Harivamsa : Ed by M. N. Dutt, Calcutta. 1897

Ibn Batuta: The Rehla of Ibn Batuta, Baroda Oriental Ins titute, 1953

Journal of the Royal Asiatic Society (Ceylon Branch)

Krishnaswamy Aiyangar, S. K. Some Contributions of South India to Indian Culture, University of Calcutta, 1923.

Mendis, G. C. : Eauty History of Ceylon, Y. M. C. A Pubiishing House, Calcutta, Ninth Impression, 1948
Nilakanta Sastri, K, N. (1) Colas, University of Madras, 1935 (2) Pandyan Kingdom, Luzac & Co London, 1929

Obeyasekara, Donald: Outlines of Ceylon History Times of Ceylon, Colombo 1911

Oldham, C, F: The Sun and the Serpent. Arnhibald Constable & Co. Ltd. London, 1905

Rasanayagam, C: Ancient Jaffna, Everyman’s Pubilshers Ltd, Madras, 1926.

RgVedavyakhya: Ed. by C. K. Raja, Adyar Lebrary, 1939 
Sewell, R,: A Forgotten Empire, George Allen & Unwin Ltd. London, Reprint 1924

South Indian Inscriptions.

Travancore Archaeological Series.

Vaidya, C. V: History of Medieval Hindr India, Oriental Book Agency, Poona, 1921 - 1924.

Vogel, J: Indian Serpent Lore. Arthur Probsthain, London 1926

Virddhagirisan,: The Nayaks of Tanjore, University Annamalainagar, 1942.

----------------

இந்நூலாசிரியர் இயற்றிய வேறு நூல்கள்.

காதலி ஆற்றுப்படை

நானாடகம்

மாணிக்க மாலை

இருநாடகம்

பூஞ்சோலை

நீரரமங்கையர்

வாழ்க்கையின் வினோதங்கள்

சங்கிலி

0 comments:

Post a Comment

 
Design by JP