Wednesday, December 28, 2011

இலங்கை வாழ் தமிழர் வரலாறு - பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை

0


ஈழநாட்டின் வடபாகத்திலிருந்து செங்கோலோச்சிய அரசரின் வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக் கூறுகின்றது இந்நூல். கி. பி. 1519 முதல் கி. பி. 1565 வரை யாழ்ப்பாணத்தை அரசாண்ட சங்கிலி என்பவனைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட சங்கிலி என்னும் நாடக நூலின் ஒரு பகுதியாக அமைந்த இவ்வரலாறு பலர் வேண்டுகோளுக்கிணங்கத் தனிநூலாக வெளியிடப்படுகின்றது. ஈழத்துத் தமிழ் மக்களின் வரலாற்றைப் பற்றிய விரிவான நூல் ஒன்று மிகவும் விரைவில் வெளிவரும்.

இந்நூலை ஆக்குங்கால் உடனிருந்துதவிய நண்பர்க்கும் ஆயோலை தூக்கி ஆராய்ந்த அன்பர்க்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். நூலினை நல்ல முறையில் அச்சிட்டுதவிய சுதந்திரன் அச்சகத்தார்க்கும் எம்நன்றி உரித்து. குற்றம் களைந்து குணங்கொண்டு எம்மை ஊக்குவித்தல் பெரியோர் கடன்.
க. கணபதிப்பிள்ளை
பல்கலைக்கழகம்
பேராதனை
20-8-1956
சரித்திரகாலத்துக்கு முந்திய யாழ்ப்பாணம்

இராமாயணத்தினின்று இலங்கை இராவணனால் ஆளப்பட்டுவந்தநாடு என அறிகின்றோம். இராவணன் அசுரவமிசத்தைச் சேர்ந்தவன். ஆரியர் இந்தியாவுக்கு வந்த போது தாசர் என்னுஞ் சாதியாரோடு போராடினர் என இருக்குவேதம் முதலியவற்றால் அறிகின்றோம். அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த நாகசாதியினரையே ஆரியர், ‘அசுரர்’ என்றும் ‘தாசர்’ என்றும் அழைத்தனர் என்பது அறிஞர் கருத்து. நாகர் என்னும் பெயர் வேதங்களில் வழங்கப்படவில்லை. எனினும், இருக்குவேதத்தில் அசுரர் அல்லது தாசரைப்பற்றிப் பேசுமிடத்து, ‘அஹி’ (பாம்பு) என்ற சொல் வருகின்றது.

“விருத்திரனை இந்திரன் வச்சிராயுதத்தினால் அடித்தபோது, வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் போல் அஹி என்பான் வீழ்ந்து கிடந்தான்”

இதினின்றும். பிறசான்றுகளினின்றும், நாகரை அசுரரென அழைத்தல் வழக்கமாய் இருந்ததெனத் தெரிகின்றது.

அடுத்து, புராண காலத்தில் நாக அரசர்கள் கடலுக்குக் கீழேயுள்ள பாதாளத்திலிருந்து அரசாண்டனர் எனப் புராணங்கள் கூறும். இக்குவாகுவின் மகனான அரியாசவன் என்பான் மகள் யாதுவை, தூயவர்மன் எனும் நாக அரசன் கடலுக்குக் கீழேயுள்ள நாட்டிற்குக் கொண்டு சென்றான் எனவும், அந்நாட்டின் பெயர் ‘இரதினத்துவீபம்’ எனவும், அந்நாட்டிலுள்ளோர் நாவாய் பல வைத்திருந்தனர் எனவும், அவர் கடல் வணிகஞ் செய்தனர் எனவும், முத்துக் குளித்தனர் எனவும் அரிவமிசம் என்னும் புராண நூல் நவிலும்

அசுரர் என்பார் திராவிடரென ஆராய்ச்சியாளர் முடிபுக்கு வந்திருக்கின்றனர்.

கௌதம புத்தர் மூன்று முறை இலங்கைக்கு வந்ததாக மகாவமிசம் கூறும். முதன்முறை மகியங்கனை என்னும் இடத்திற்கும், இரண்டாம் முறை நாகதீபத்துக்கும், மூன்றாம் முறை கலியாணி என்ற பெயருடைய களனி என்னும் இடத்துக்கும் வந்தார் எனவும், நாகதீபத்திலும் கலியாணியிலும் நாகர்வசித்தனர் எனவும், நாகதீபத்திலுள்ள அரசகுடும்பத்தில் அரசுகட்டில் ஒன்றன் பொருட்டாக ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்ப்பதற்காக வந்தார் எனவும் அந்நூல் நவிலும். மேலும் நாகதீபத்தில் உள்ள அரச குடும்பத்தின் உறவினர் கலியாணியில் இருந்தனரெனவும் அப்பாளி நூல் கூறும்.

இதனின்றும், இலங்கையின் ஒரு பெரும் பிரிவில், பண்டைக்காலத்தில் நாகர்குடி பரவியிருந்ததெனத் தெரிகின்றது. இக்கருத்தினை, கி. பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டளவில் எழுந்த மணிமேகலையும் வலியுறுத்தும். வட இலங்கையிலுள்ள நாகர் குடியிருப்பிற்குப் பண்டைய நாட்களில் தலைநகராய் இருந்தது கந்தரோடை என்னும் நகர் என ஆராய்ச்சியாளர் கருதுவர். மேலும் இந்தியாவிலிருந்து சங்கமித்தை புத்தகாயாவிலிருந்த புனித வெள்ளரசக்கிளையை இலங்கைக்குக் கொண்டுவந்த போது இலங்கையின் வடபகுதியிலுள்ள சம்புகோளம் என்னுந் துறையில் வந்திறங்கினள் என மகாவமிசம் கூறும்.

பண்டைக்காலத்தில் வடஇலங்கை கிரேக்க உரோமர்களோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. இந்த உண்மை அங்கு கண்டெடுத்த கிரேக்க உரோம நாணயங்களினால் தெரிகின்றது.

நாகதீபமென்னும் பகுதி எங்குள்ளதெனச் சரித்திர ஆராய்ச்சியாளர் தடுமாறியிருக்கையில் வல்லிபுரக்கோயிலிலே செப்பேட்டு;ச்சாசனம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதின்படி வட இலங்கையையே பண்டைக் காலத்தில் நாகதீப மெனக் குறித்தனர் எனத் தெரிந்தது. விசயன் பிறப்பதற்கு முன்னரேயே நாகதீபம் (வடஇலங்கை) மிகவும் செழிப்புள்ள பெரிய வணிகத்தலமாக விளங்கியது. பின்னர் இவ்வடபகுதியில் வாழ்ந்த நாகசாதியினர் காலத்துக்குக் காலம் தமிழரோடு கலப்பாராயினர்.

அதனால் அண்மையிலிருக்கும் தமிழகத்திலிருந்து பலகுடிகள் வந்திறங்கின. காலப்போக்கில் வடஇலங்கை தமிழக் குடியிருப்பாக மாறியது. பல்லவ காலத்தில் வாழ்ந்த சைவநாயன்மார் இலங்கையின் வடபகுதியிலுள்ள திருக்கேதீச்சரம், திருக்கோணாமலை ஆகிய தலங்களைப் பாடியிருப்பதும் இங்கு நோக்கத்தக்கது. சைவசமயத்தை மேற்கொண்டொழுகிய தமிழர் இப்பகுதிகளில் வாழ்ந்தனர் என்பது இதனால் அறியப்படுமன்றோ!

இதுவரை பெரும்பாலும் புராணவரலாறுகளைக் கொண்டும் மகாவமிசத்தில் சொல்லப்பட்டவற்றைக் கொண்டும் கர்ணபரம்பரைக் கதைகளைச் சேர்த்தும் ஒருவாறு இப்பகுதியின் பழைய வரலாற்றைத் தொகுத்துக் கூறினோம். இனி, பிறசரித்திரச் சான்றுகளின் துணைக் கொண்டு பிற்கால வரலாற்றினை ஒருவாறு ஆராய்வாம்.

உக்கிரசிங்கன் தொடக்கம் பாணன் வரை

பண்டைக்காலத்திலே, வட இலங்கை நாகசாதியினர் குடியிருப்பாக இருந்த காலத்து, சிங்கைபுரம் அல்லது சிங்கைநகர் என்று பெயர் கொண்டு விளங்கிய நகரத்திலே கலிங்கதேசத்திலிருந்து வந்து குடியேறிய குடும்பங்கள் சில வாழ்ந்து வந்தன. உத்தரப் பிரதேசமென்று மகாவமிசம் குறிப்பிடும் இப்பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறிய தமிழ்க் குடும்பங்கள் பல வாழ்ந்து வந்தன. இக்காலப் பகுதியில் சிங்கள அரசர்கள் அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையின் பிற பகுதிகளை ஆண்டு வந்தனர்.

மகாவமிசம் எடுத்து மொழிந்த அரசபரம்பரையின் வரலாற்றைத் தொடர்ந்து கூறும் சூளவமிசம் மேலும் ‘ஆறு இராசாக்கள் காலம்’ என்னும் பிரிவில் இவ்வுத்தரப் பிரதேசத்தில் கலகங்கள் முறைக்கு முறையெழுந்தன வெனவும், அவற்றை அனுராதபுரத்திலிருந்தரசாண்ட அரசரி;ன் சேனைகள் அங்குப் போய் அடக்கி வந்தனவெனவும் இயம்பும். சீலமேகன் என்னும் சிங்கள அரசன் மகன் மகிந்தன் என்பான் மாதோட்டத்தில் எழுந்த புரட்சியை அடக்கி, உத்தரதேசத்தைத் தனது ஆணைக்குள் ஆக்கினான் என அந்நூல் கூறும்.

ஈண்டுக் குறிப்பிடு:ங் காலத்திலே கலிங்க தேசத்தினின்று வந்து வட இலங்கையிற் குடியேறிய குடும்பங்களுக்கு உக்கிரசிங்கனென்பான் தலைவனாக இருந்தான் என ஊகிக்கக் கிடக்கின்றது. இவனைக் குறித்து யாழ்ப்பாணவைபவமாலையும், கைலாய மாலையும் எடுத்து மொழியுமேயன்றித் தென்னிந்திய வரலாறோ, சூளவமிசமோ, கல்வெட்டுக்களோ யாதுங் கூறா குறித்த உக்கிரசிங்கன் தன் காலத்து வாழ்ந்த ஏனைய உத்தரதேசத் தலைவரோடு சேர்ந்து அனுராதபுரத்திலிருந்தாண்ட சிங்கள அரசருக் கெதிராகக் கலகங்கள் விளைத்துத் திரிந்தான் என எண்ண இடமுண்டு. சூளவமிசம் உத்தரப்பிரதேசத்தைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் தருங் குறிப்புக்களைப் பார்க்கும் பொழுது வட இலங்கைக்கும் தனியரசொன்று இருந்ததென நாம் ஊகிக்கக் கிடக்கின்றது.

அக்காலத்திலும் தமிழத் தலைவர்கள் அனுராதபுர அரசின்கீழ் மிகுந்த செல்வாக்குப் பெற்ற பிரதானிகளாயிருந்து ஆட்சி செலுத்தின ரென்பது சூளவமிசத்திற் காணப்படும் பொத்தக் குட்டன் என்பான் வரலாற்றினின்றும் தெரிகின்றது.

அன்றியும் அனுராதபுரம் சிங்கள நாட்டுத்தலைநகராய் விளங்கிய காலத்துத் தமிழ் அரசரும் காலத்துக்குக்காலம் அங்கு ஆண்டு வந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்னும் சிங்கள அரசர் சிலர் அரசியற் றொல்லைகள் ஏற்படுங்காலத்து வட இலங்கைக்குச் சென்று அங்கு தங்காலத்தை அமைதியாகக் கழித்தனர் என்றும் தெரியவருகின்றது.

பின்னர் மகிந்தன் அனுராதபுரத்து அரசபீடத்தேறி இரண்டாம் மகிந்தன் என்னும் பேருடன் ஆண்டு வருங் காலத்தில் அவ்வரசினுக்கு உரிமை கோரித் தப்புளன் முதலியோர் அவ்வரசினைக் கவரும் பொருட்டு மகிந்தனோடு போர் புரிந்து கலகம் விளைத்து வந்தனர். அக்காரணத்தால் நாட்டில் அமைதி குன்றியது. அந்நிலையைப் பயன்படுத்தி வட பகுதியில் வலிமையோடு விளங்கிய உக்கிரசிங்கன், வட பகுதியிலுள்ள தலைவர்களை யெல்லாம் அடக்கியபின், மாற்றார் கைக்கு இலகுவில் படக்கூடிய கடற்கரைப் பட்டினமாகிய சிங்கைநகரைத் தன்தலைநகராகக் கொள்ளாது அங்கிருந்து வெளியேறிப் பாதுகாக்கக் கூடியதும். மாற்றார் கைக்கு எளிதில் அகப்பட முடியாததும், நிலப்பிரப்பினால் சூழப்பட்டதும், பழைய நாகர் தலைநகராயிருந்ததுமான கந்தரோடை என்னும் நகரத்தினைத் தன் தலைநகராக்கினான். ஆளும் அரசனைத் தொலைத்து நாட்டிற் கலகங்கள் ஏற்படுங் காலங்களில் வலிமையுள்ளான் ஒருவன். தன் வலிமையினால் ஆங்குத் தன் ஆட்சியை நிறுவித் தானே அரசானதல் சரித்திரங் காணாத தொன்றன்று.

இவ்வாறு அரசுகட்டிலேறிய உக்கிரசிங்கன் “மாவிட்டபுரம்” என இப்பொழுது வழங்கும் ஊரில், தென்னிந்தியாவிலிருந்து உடல்நலங் காரணமாக வந்திருந்த “மாருதப்புரவீகவல்லி” என்னும் அரச கன்னிகையைக் கண்டு அவளைத் தன் வாழ்க்கைத் துணைவியாக ஆக்கிக் கொண்டான் என்று கூறும் வரலாறு இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தனர். அவர்களுள் ஒருவனாகிய சயதுங்கவரராசசிங்கன் தந்தையின் பின் செங்கோலோச்சினான்.

இஃது நிகழுங்காலையில் அனுராதபுரத்தினை முதலாஞ்சேனன் (கி. பி. 831 - 851) ஆண்டு கொண்டிருந்தான். இதே காலத்தில் தென்னிந்தியாவில் வலிமையோடிருந்த பல்லவ அரசு வலி குன்றியது. முதலாம் பாண்டியப் பேரரசு தலை தூக்கத் தொடங்கியது.

முதலாஞ்சேனன் காலத்துப் பாண்டிய அரசனொருவன் இலங்கை அரசினைக் கைப்பற்றும் நோக்கத்துடன் வட இலங்கையில் வந்திறங்கினானென சூளவமிசமெனும் பாளிநூல் கூறும். இப்பாண்;டிய அரசன், வரகுணபாண்டியனென்னும் பராந்தக நெடுஞ்சடைநன் மகன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் ஆவன். பாண்டியன் வந்திறங்கியதை அறிந்த சிங்கள அரசன் அவனுக்கெதிராகப் படையொன்றினை யனுப்பினான். இச் சிங்களப்படையைப் பாண்டியமன்னன் எளிதிற் தோற்கடித்து உத்தரதேசத்தைக் கைப்பற்றி “மகாதாலித்த காமம்” என்னம் ஊரில் பாடி வீடமைத்துத் தன்படையுடன் இருந்தான். உத்தரப்பிரதேசம் தமிழ்க்குடியிருப்பாக இருந்ததனால் அங்கு வாழ்ந்தோர் பாண்டியன் பக்கஞ்சோர்ந்தனர். அதனால் பாண்டியப்படை இருமடங்கு வலியுற்றது. இவ்வாறு தன்னொடு சேர்ந்த இலங்கைத் தமிழ்ப்படையின் உதவி கொண்டு, தட்டுத் தடக்கின்றி அனுராதபுரத்தேகி அந் நகரைத் கைப்பற்றினான்.

எனினும் பாண்டியப்படை வட இலங்கைக் கரையில் இறங்கியபோது, அக்காலத்து அங்கிருந்து ஆணை செலுத்திய தலைவனாகிய செயதுங்கவரராசசிங்கன் அவனை எதிர்த்தான் போலும் அதனால் போர் மூண்டது. அப்போரில் செயதுங்கவரராசசிங்கன் மடிந்திருக்க வேண்டும். பின்பு பாண்டியன் நாட்டைவிட்டுச் சென்றபோது கலகங்களும் குழப்பங்களும் இருந்து வந்தன. இதனைக் கண்ணுற்ற சூழ்ச்சித்திறனும் வலிமையும் படைத்த பாணன் ஒருவன் தருணத்தைத் தப்ப விடாது குடிகளை யடக்கித் தானே அரசனானான்.

செயதுங்க வரராசசிங்கன் வழித்தோன்றல்கள் விசயகூழங்கைச் சக்கரவர்த்p காலம் வரை நாட்டையாண்டு வந்ததாக யாழ்ப்பாண வைபவமாலை ஒன்றே கூறும். பாணனைப்பற்றிய பரம் பரைக்கதைகளை நவிலும் பிறசான்றுகள் எவையும் இதைப்பற்றி கூறிற்றில. சரித்திரத்தல் சடுதியில் பதவி பெற்று உயர்ந்தோர் போலவே இவனும் பெருமிதமுற்றுத் தன்பெயரையும் புகழையும் நிறுத்தும் வண்ணம், தன் பெயரினால் ஒரு சிறு பட்டினத்தை நிறுவி அதனை யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டனன் போலும். இதுவே பரம்பரைக் கதைகளினின்று நாம் எடுக்கக்கூடிய வரலாற்றுக்கிடக்கை.

பாணன் தொடக்கம் ஆரியச்சக்கரவர்த்தி வரை

ஒன்பதாம் நூற்றாண்டின் பி;ற்பகுதியில் இந்தியாவில், சோழப் பேரரசின் காலம் தொடக்குகின்றது. இது ஏறத்தாழ கி; பி. 840க்குப் பின்னாக இருக்கலாம். இக்காலத்துப் பராந்தக சோழன் (கி. பி. 907 - 956) இலங்கைக்குப் படையெடுத்து ஆண்டு வந்தவன் உதயன் (கி.பி.945 - 953) ஆவன். இச்சிங்கள அரசன் வடஇலங்கையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தினானோ தெரியவில்லை@ இதைப்பற்றிய குறிப்பேதும் சூளவமிசத்தில் இலது.

பாணனும் அவன் பரம்பரையினரும் யாழ்ப்பாணத்தில் ஒரு சிறு பாகத்தையே ஆண்டிருத்தல் வேண்டும். ஏனைய பகுதிகளை வேறு வேறு தமிழ்த்தலைவர்கள் ஆண்டனர் போலும். ஒரு குடைக்கீழ் ஒரு தனியரசன் யாழ்ப்பாணம் முழுவதையும் ஆண்டான் என்பதற்கு ஆதாரமெதுவும் இல்லை.

நிலைமை இவ்வாறிருக்க யாழ்ப்பாணக் கடலெங்கணும் சோழக்கடற்கரை உலாவித்திரிந்தது. யாழ்ப்பாணத்து நாகர் கோயிலுக்கு அண்மையிலுள்ள நெய்தற் கிராமம் ஒன்றிற்குச் ‘செம்பியன் பற்று’ என்ற பெயர் இன்றும் உளது. சோழப்படைகள் இப்பகுதியில் வந்திறங்கினர் என்பதை இது வலியுறுத்தும். கி. பி. ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டுகளில் சிங்கள மன்னர் அனுராதபுரத்தை விடுத்து புலத்திநகர் எனப்படும்; பொலநறுவையைத் தமது தலைநகராக்கிக் கொண்டனர். செம்பியன் பற்றிலிருந்து பொலநறுவைக்கு நேராகச் செல்லப்பெருந்தெரு ஒன்று அமைந்திருந்தது. ஆகையால் சோழர் தமது சேனைகளைச் செம்பியன் பற்றில் இறக்கி அத்தெருவினூடாகப் பொலநறுவைக்கு நடத்திச் சென்றனர் போலும் அன்றியும் மாவிட்டபுரப்பகுதியில் ஓரிடம் ‘வளவர் கோன் பள்ளம்’ என்னும் பெயரால் இன்றும் வழங்குகிறது. சோழர் இப்பகுதியில் பெரிதும் நடமாடினர் என்பதற்கு இதுவும் சான்று பகரும்.

இஃதிங்ஙனமிருக்க, இராட்டிரகூட அரசனான மூன்றாம் கிருட்டினன் (கி. பி. 940 - 967) என்பவன் தக்கோலம் என்னும் ஊரில் நடந்த போரில் பராந்தக சோழனை முறியடித்தான். அதனால் இதுகாறும் முன்னேறி வந்த சோழவரசு சிறுகாலந் தடையுற்றது. தக்கோலத்தில் வெற்றியீட்டிய கிருட்டினன் வெற்றிவிருதுடன் தன் புகழை நிலைநாட்டப் பெருமிதத்துடன் எங்கணுந் திரிந்தான் என்பதை இராமேச்சரத்தில் அவன் நாட்டிய கல்வெட்டுச் சான்றுபகரும். அவன் இராமேச்சரம் வந்த நாட்களில் இலங்கையின் வட கோடியிலுள்ள நாகதீபத்திற்கும் (நயினாதீவு) வந்தனனெனச் சூளவமி கூறும். இவ்வரசன் வெற்றி வருகையைக்கேள்வியுற்ற சி;ங்களவரசன் நான்காம் மகிந்தன் (கி. பி. 956 - 972) தனது சேனாதிபதி சேனன் என்பானை யனுப்பி அவனைத் தோற்கடித்தான் என்றும், பின்னர் குறிப்பிட்ட இராட்டிரகூட அரசனுடன் நட்புறவு பூண்டு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டான் என்றும், சரித்திரத்தை ஒருமுகமாய்க் கூறிச் செல்லும் தன் இயல்புக் கிணங்க மெழுகிக் கூறும் அந்நூல். இதுகாறும் பாண்டிய சோழ நெருக்கங்களினால் மிகத் தளர்ந்திருந்த சிங்கள அரசு இக்காலத்துச் சிறிது தழைக்கத் தொடங்கியது. அதனால் பழையபடி சிங்களவருடைய ஆதிக்கம் யாழ்ப்பாணத்திலும ஒருசிறிது பரவிற்று எனக் கொள்ளலாம்.

தக்கோலப் பெரும் போரின் விளைவாகச் சிலகாலம அடங்கிக் கிடந்த சோழப் பேரரசு. பின்பு சுந்தரச் சோழன் பட்டத்துக்கு வந்ததும் முன்னேறத் தொடங்கியது. கி;. பி. 1001ம் ஆண்டிற்கும் 1004ம் ஆண்டிற்கும் இடையில் முதலாம் இராசராசன் (கி.பி 985 - 1016) இலங்கைக்குப் படையெடுத்துவந்து வடபகுதியையும் தனதாட்சிக்குள்ளாக்கினான். இதனால இதுகாறுஞ் சிறிது சிறிதாக முன்னேறி வந்த யாழ்ப்பாண அரசு கி. பி. 1070 வரை, இலங்கையின் ஏனைய பாகங்களைப் போலவே, சோழப் பெருமன்னர் ஆட்சிக்குக் கீழ் இருந்து வந்தது. சோழப் படைவீரர் போய் பிசாசுகள் போல் இரத்த வெறி கொண்டு எங்குந் திரிந்து நாட்டிலுள்ள புத்தபள்ளிகளையும் தவச்சாலைகளையும் சூறையாடிப் பாழ்படத்தினரெனச் சூளவமிசம் புலம்பும். ஆனால் அண்மையில் திருக்கோணாமலையில் கண்டெடுத்த கல்வெட்டொன்றினால் இராசராசச் சோழன் காலத்து ‘இராசராசப் பெரும் பள்ளி’ என்னும் பெயருடன் ஒரு புத்தபள்ளி யமைத்து அதற்கு மானியமும் வழங்கப் பட்டது என அறிகிறோம். பின் முதலாம் குலோத்துங்கசோழன் (கி. பி. 1070 - 1120) ஆட்சிக்கு வந்த காலத்து அவன் தளபதி கருணாகரத் தொண்டைமான கலிங்கமெறிந்ததோடு அமையாது இலங்கையையும் கைப்பற்றினானெனக் கலி;ங்கத்துப்பரணி என்னும் நூல் இயம்பும் கருணாகரத் தொண்டைமானே தொண்டைமானாற்றை வெட்டியவனாவான். கரணவாய் வெள்ளைப் பரவை ஆகிய இடங்களில் விளையும் உப்பை இவ்வாற்றின் ஊடாகக் கொண்டு சென்று கப்பல்களில் ஏற்றிச் சோழநாட்டுக்கு அனுப்பினானென இராசநாயக முதலியார் கூறுவர்.

குலோத்துங்க சோழனுக்குப்பின் சிங்கள மன்னர்களாகிய முதலாம் விசயவாகு, முதலாம் பராக்கிரமபாகு ஆகியோர் காலத்தில் யாழ்ப்பாண அரசின் நிலையைப் பற்றிய செய்தி எதுவும் நன்கு தெரியவில்லை. இவ்விரு மன்னர் காலத்தும், இலங்கை முழுவதும், ஒரு முடிக்கீழ் இருந்து வந்தது எனினும் வட இலங்கையில், பராக்கிரமவாகுவின் ஆட்சிக் காலத்திலும் உரிமைப் போர் நடை பெறாமலில்லை. பராக்கிரமவாகு அரசுகட்டிலேறிய பதினாறாமாண்டிலே (கி. பி. 1168 - 1169) மாதோட்டப் பகுதியில் வாழ்ந்த தமிழர் இவ்வரசனின் ஆட்சிக்குக்கீழ் அடங்கி வாழ்வதிலும் இறந்து படுதலே நன்றெனத் துணிந்து புரட்சிக்கொடியை உயர்த்தினர். இப்புரட்சியினை யடக்க, வலிமிக்க மன்னனாகிய முதலாம் பராக்கிரமவாகு தன் ஆணைக்குட்பட்ட நாற்பெரும் படைகளையும் மாதோட்டத்திற்கு அனுப்பவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இவ்வாறு சூளவமிசம் கூறும். அஃதவ்வாறாயின் அப்புரட்சி எத்தணை வலிபடைத்ததாய் இருந்திருத்தல் வேண்டும்,?

முதலாம் பராக்கிரமவாகுவிற்குப் பின் இலங்கையில் அரசுரிமை பற்றிய குழப்பங்கள் இருந்தமையால் அங்கு நிலையான ஆட்சி இருக்கவில்லை. அவனுக்குப்பின் தளபதிகள் பலர் நாட்டை ஆண்டு வந்தனர். இதற்கிடையில் பாண்டிய பரம்பரையில் இருந்து வந்து சிங்கள அரச குடும்பத்தோடு தொடர்பு பூண்டிருந்த பராக்கிரம பாண்டியன் என்பானும் சில காலம் ஆண்டான். இவ்வாறு பராக்கிரம பாண்டியன் அரசாளுகையில் கலிங்க தேசத்திலிருந்து கேரளப் படையுடன் மாகன் என்பான் சிங்கள அரசுக்கு உரிமைகோரி வட இலங்கையில் வந்து இறங்கினான். இவன் செயவாகு என்பவனோடு சேர்ந்து முதல் வட இலங்கை முழுவதையும் தன் ஆணைக்குள் அடக்கிக் கோட்டை கொத்தளங்கள் அமைத்தனன். “கொட்டசார”, கங்காதளாக, காகாலய, பதீ, குறுந்தி, மனாமத்த. மாகிந்த. மன்னார், பலச்சேரித்துறை, வாலிகாகம, கோண, கோனுசு, மதுபாதவதித்த சூகரதித்த ஆகிய இடங்களில் அரண்கள் அமைத்து வட இலங்கை முழுவதையும் பல்லாண்டுகள் ஆண்டு வந்தனர். அதன் பின் புலத்திநகர் என்ற பொலநறுவையைக் கைப்பற்றி அதனைத் தனது தலைநகராக்கினான். இவன் காலம் கி.பி 1215 - 1235 ஆகும்.

இவனது ஆட்சிக்காலம் தொடக்கம் இலங்கையில் தமிழரசு வலியுறத் தொடங்கியது. புத்தளத்திலிருந்து திருக்கோணமலை வரைக்கும் ஒரு கோடு கிழித்தால் அக்கோட்டின் வடக்குப் பாகம் முழுவதும் தமிழ் இராச்சியமாக அமைந்திருந்த தென்பது மேற் கூறியவற்றால் விளங்கும். அன்றியும் தமிழர் ஆதிக்கமும் அவர்தம் அரசியற் செல்வாக்கும் ‘மாயரட்டை” எனப்படும் நீர்கொழும்பு சிலாபப் பகுதி வரையும் பரந்தது.

அதன் பின் பண்டித பராக்கிரமபாகு என்னும் இரண்டாம் பராக்கிரமவாகு என்னும் இரண்டாம் பராக்கிரமவாகு (கி. பி. 1236 - 1271) அரசினைக் கைப்பற்றினான். எனினும் வட இலங்கையில் நிறுவப்பட்;ட தமிழரசினை அவனால் அடக்க முடியாது போயிற்று. இப்பராக்கிரமவாகு காலத்தில் (கி. பி. 1244) மலாய தீபகற்பத்துத் தாம்பிறலிங்கம் என்னும் பகுதியை ஆண்ட புத்த அரசன் சந்திரபானு என்பான் அற்புதங்கள் நிகழ்த்தக் கூடிய புத்தசிலை ஒன்று இலங்கையில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அதனைக் கைப்பற்றும் நோக்கமாக இலங்கைக்குப் படையெடுத்து வந்தான். அப்பொழுது சிங்களப் படை இவனை முறியடித்தது. இவன் மீண்டும் நான்காம் விசயவாகு (கி. பி. 1271 - 1273) காலத்தில் படையெடுத்து வந்து வட இலங்கையிலுள்ள மாதோட்டத்தில் இறங்கினான். அங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்று சில இடங்களில் பாடிபோட்டிருந்தான். அவனுடைய சாவகப்படை தங்கியிருந்தபடியாலேயே சாவகச்சேரி, நாவற்குழியிலுள்ள சாவகன்கோட்டை ஆகிய இடங்கள் இப்பெயர்களைப் பெற்றன என்பர்.

இக்கலகம் அடங்கியபின்னர் யாப்பகுவையிலிருந்து அரசோச்சிய நான்காம் விசயவாகு காடடர்ந்து கிடந்த அனுராதபுரத்துக்கு வந்து அந்நகரிலுள்ள புத்தகோயில்களைத் திருத்துவித்தான்.

இக்காலத்தில் வன்னிப்பகுதி தமிழ்ச் சிற்றரசனின் கீழ் இருந்து வந்தது. குறிப்பிட்ட சிங்கள அரசன், இச்சிற்றிரசர் கையில். அனுராதபுரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்தான்.

இஃதிவ்வாறிருக்க கி. பி. 1216 ம் ஆண்டுக்குப் பின்னர் தென்னிந்தியாவில் இரண்டாம் பாண்டியப்பேரரசு உருப்பெறத் தொடங்கியது. இப்பேரரசு சடாவர்மன் சுந்தரபாண்டியன் (கி. பி. 1253 - 1270) காலத்தில் உயர்நிலை யடைந்தது. சடாவர்மன் இலங்கைக்குப் படையெடுத்து வந்து சிங்கள அரசனை வென்று திறை கொண்டு சென்றான். இப்பாண்டியன் ஈட்டிய வெற்றியைக் குறித்துப் புத்தசரித்திர நூலாகிய சூளவமிசம் எதுவும் கூறாது வாயடைத்து நிற்கும்.

சுந்தரபாண்டியன் வெற்றிகளிலும் கீர்த்திப் பிரவாகங்களிலும் நெருங்கிய தொடர்பு கொண்டவனாகிய அவன் மகன் சடாவர்மன் வீரபாண்டியன் (கி பி 1253 - 1268) இலங்கையைப் பாண்டிய சாம்ராச்சியத்தினுள் அடக்கும் பொருட்டு பூநகரிக்கு அண்மையில் வந்திறங்கினான். அவன் வந்திறங்கிய இடத்தை இன்றும் வீரபாண்டியன் முனை என அழைப்பர். தனது படையை எதிர்த்த அங்குள்ள அரசனைக் கொள்றொழித்தபின், பொலநறுவைக்குப் போகும் அரசப் பெருந்தெருவழியாகச் சென்று திருகோணமலையை யடைந்தான். அங்குத் தன் வெற்றிக்கறிகுறியாகப் பாண்டிய சின்னமான இருமீன் முத்திரையைப் பொறித்து மீனக் கொடியையும் உயர்த்தினான். இவன் வெற்றிச் செலவினை யறிந்த சிங்கள மன்னனாகிய இரண்டாம் பராக்கிரமவாகு அடிபணிந்து திறை கொடுத்தான். வீரபாண்டியன் பொறித்த வெற்றிச் சின்னத்தை “விறடறிக்கு” க் கோட்டை 24 வாயிலில் இன்றும் காணலாம். பின்பு பாண்டி நாட்டில் மாறவர்மன் குலசேகரன் (கி. பி 1268 - 1301) பட்டத்திற்கு வந்ததும் இலங்கைக்குத் தளபதியாக “ஆரியச்சக்கர வர்த்தி” என்னுந் தண்டத் தலைவனை அனுப்பினான். அவன் நாட்டை மேற்பார்வை இட்டுக்கொண்டு வட வடஇலங்கையிலேயே தங்கினான். இவனிலிருந்தே யாழ்ப்பாணத் தெழுந்த புதிய அரச பரம்பரை தோன்றியிருத்தல் வேண்டும். இவனுக்குப்பின் வந்த யாழ்ப்பாணத்து மன்னர் யாவரும் “ஆரியச்சக்கரவர்த்தி” என்னும் அரசபட்டப் பெயரைக் கொண்டு வளங்கினர்.

ஆரியச் சக்கரவர்த்திகள் முதலாம் பரம்பரை

வலிமைமிக்க தளபதிகள் தாஞ் சென்ற சென்ற இடங்களில் தருணம் வாய்க்கும் போது தம்மை அரசராக்கிக்கொள்ளும் வழக்கம் சரித்திரத்திற்குப் புதிய தொன்றல்ல

பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திலும், பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தென்னிந்தியாவில் நிகழ்ந்த இசிலாமியப் படையெடுப்பால் பாண்டிநாட்டில் கலகங்கள் மலிந்து கிடந்தன. அதனோடு அங்கு உள்நாட்டுக் கலகங்களும் இருந்துவந்தன. மேலும் இந்நாட்களில் சிங்கள இராச்சியம் வலிகுன்றியிருந்தது. இவற்றினைப் பாண்டியத்தளபதியாகிய ஆரியச் சக்கரவர்த்தி பெரிதும் பயன்படுத்தித் தன்னையே வட இலங்கைத் தமிழ்ப்பகுதிக்கு அரசனாக்கிக் கொண்டான் எனக் கருத இடமுண்டு.

இத்தொடர்பில் யாழ்ப்பாண வைபவமாலை கூறுவதையும் சிறிது நோக்குவோம். மயல்வாகனப் புலவர் யாழ்ப்பாண வைபவமாலையைப் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதினார். இவர் தமது நூலுக்குக் கையாண்ட முதனூல்கள் யாவும் புராண முறையில் அமைந்துள்ளனவேயன்றி மகாவமிசம், சூளவமிசம், இராசதரங்கிணி, கொங்குதேச இராசாக்கள், இராசாவளி (மைசூர்) ஆகிய நூல்களைப் போல ஓரளவிற்காவது சரித்திர ஒழுங்கில் எழுதப்பட்டனவல்ல. மயில்வாகனப்புலவர் தமது நூலைக் கைலாயமாலை, வையாபாடல், பரராசசேகரனுலா, இராசமுறை முதலிய நூல்களைக் கொண்டு எழுதிய தோடமையாது தாம் கர்ண பரம்பரையாக் கேட்ட கதைகளையும் கூட்டிப் புனைந்துள்ளார் எனத் தெரிகிறது. காலம் பொருந்தாமை தலைதடுமாற்றம் ஆகியவை இந்நூலில் மலிந்து கிடக்கின்றன.

சாசனச் சான்றுகளும் பிறசான்றுகளும் யாழ்ப்பாணச் சரித்திரத்துக்கு இதுகாறும் இல்லாமையினால் இவர் கூறும் உண்மையான சரித்திர சம்பவங்களைக்கூட வரலாற்று முறையில் வைத்து யாழ்ப்பாணச் சரித்திரத்தினை ஆராய்ந்து கொள்ள இயலவில்லை. யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் “யாழ்ப்பாணங் கொஞ்சக்காலம் தளம்பிக் கொண்டிருக்கையில் பொன்பற்றியூர் வேளாளன் பாண்டிமழவனென்னும் பிரபு மதுரைக்குப் போய் அவ்விடத்திலே, சோழநாட்டிலிருந்து வந்துஇராச உத்தயோகத்துக்கேற்ற கல்வி கற்றக்கொண்டிருந்த சிங்கையாரியன் என்னுஞ் சூரியவமிசத்து இராசகுமாரனைக் கண்டு யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்ய வேண்டுமென்று கேட்க அவன் தன் பரிவாரங்களுடன், பாண்டிராசன் வழிவிட்டனுப்பி வைக்க, யாழ்ப்பாணத்தில் வந்திறங்கி நல்லூரைத் தனது இராசதானியாக்கி யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்தான்” என்பர்.

மதுரைக்குச் சென்ற பாண்டிமழவன் சோழநாட்டிலிருந்து அங்கு வந்திருந்த சிங்கை யாரியனைக் கொண்டுவந்தான் எனவும், அவனைப் பாண்டியமன்னன் வழியனுப்பி வைத்தானெனவும் ஆசிரியர் கூறுகின்றார். அவனைப் பரிவாரங்களுடன் அனுப்பி வைத்தான் எனவும் அங்கு கூறுகின்றார். இஃது பாண்டியமன்னன் தன் சேனையோடு தளபதியைப் போருக்கு அனுப்பினான் என்னும் வரலாற்றைச் செய்தியைத் திரித்துக் கூறியதாய் இருத்தல் வேண்டும்.

இவ்வாரியச் சக்கரவர்த்தியைக் கூழங்கையாரியன். விசய கூழங்கைச் சக்கரவர்த்தி, சிங்கை யாரிய மகாராசன் என்னும் பெயர்களாலும் வைபவபமாலை அழைக்கும். இஃது தமிழ் நாட்டிலே பலப்பல காலங்களிலே உருப்பெற்ற அரச பரம்பரைக் கதைகளை இவ்வாரியச் சக்கரவர்த்தி மேலேற்றும் எண்ணத்தால் ஏற்பட்ட மயக்கம் எனக் கருதுதல் பிழையன்று.

பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் அரசு கட்டிலேறிய முப்பத்தேழாவது ஆண்டு (கி. பி. 1305) குறித்த இவ்வாரியச் சக்கரவர்த்தி இலங்கைமேற் படையெடுத்தான். சூளவமிசத்தின்படி இவன் தான் சூறையாடிய பொருட்களுடன் பாண்டி நாட்டிற்குத் திரும்பினான்.

ஆரியச் சக்கரவர்த்தி என்னும் இத்தண்ட நாயகன் கீழ் வந்த பாண்டியப் படையெடுப்பின் பின் யாழ்ப்பாணத்தினை யாண்ட ஒவ்வோர் அரசனும் தனக்கு ஆரியச் சக்கரவர்;த்தி யென்னும் பட்டப்பெயரைச் சூட்டிக் கொள்வது வழக்கமாயிற்று. தண்டநாயகன் ஆரியச்சக்கரவர்த்தி பாண்டிநாடு திரும்பினானெனச் சூளவமிசம் கூறும். ஆனால் ஆரியச்சக்கரவர்த்தி என்ற பட்டப் பெயருடன் அரசபரம்பரை யொன்று யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்தது என்பது வெளிப்படை. எனவே, இவ் வாரியச்சக்கரவர்த்தி பரம்பரை இக்காலத்திலே தொடங்கிய தென்பது சரித்திரஉண்மை.

கி. பி; 1344ல் இலங்கைக்கு வந்த புகழ் பெற்ற இசிலாமியப் பிரயாணியான இபுன் பத்தூத்தா வடஇலங்கையில் ஆரியச்சக்கரவர்த்தி என்னும் அரசன் ஆண்டதாகக் கூறுவான். இவன் வந்தபோது வடஇலங்கை அரசனாம் ஆரியச் சக்கவர்த்தி மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கினானெனவும் கூறுகின்றான். இத்தகைய வளமும் வலியும் ஓர் இராச்சியத்தில் ஏற்படுதற்குப் போதுமான காலந்தேவை. ஆகையால் இந்த அரசபரம்பரை கி. பி. 1305 - 1344 க்கு இடையில் தொடங்கியிருத்தல் வேண்டும். இப்பரம்பரை அரசினரின் தலைநகர் ‘சிங்கைநகர்’ என்பர் இதனைக்கோட்டமாகக் கல்வெட்டிலும். அரச கேசரி பராக்கிரமபாண்டியனின் தென்காசிக் கோயிற் கல்வெட்டிலும் காணலாம்.

இவ்வரசபரம்பரை யாழ்ப்பாணத்தை ஆளும் பொழுது (கி. பி. 1450) கோட்டை இராச்சியத்தை ஆறாம் பராக்கிரமவாகு ஆண்டான். அவன் காலத்திலே அவன் வளர்ப்புப் பிள்ளையாகிய சப்புமால் குமரையா யாழ்ப்பாணத்திற்குப் படையெடுத்துக்கோட்டை கொத்தளங்களையழித்துத் தமிழ்ப்பகுதியை ஆண்ட மன்னனைத் துரத்தித் தானே அரசாண்டான். சப்புமல்குமரையன் தொடுத்து வெற்றி கண்ட போரைத் தமிழ்மன்னருக் கெதிரான சிங்களக்கலகமென வைபவமாலை கூறும். மேலும் இப்போர் நடந்தது கனகசூரியன் என்னும் அரசன் காலத்திலே என்றும் அது நவிலும். ஆரியச்சக்கரவர்த்தியென்னும் பட்டப்பெயர் கொண்ட அரசபரம்பரையைத் தொடங்கியவனுக்கும் குமரையன் முறியடித்த கனகசூரியனுக்குமிடையில் ஒன்பது அரசர்கள் சிங்கை நகரிலிருந்து ஆண்டதாக வைபவமாலை கூறும். இவ்வரசர்களைப் பற்றிய செய்திகளொன்றும் தெளிவாகத் தெரியவில்லை. இவர் ஆண்ட ஒழுங்கு முறைகளைக் கால வரிசைப்படுத்திக் கூறவும் முடியவில்லை. வைபவமாலையின் படி குறித்த அரசபரம்பரை மேல் வருமாறு :-

1. விசய கூழங்கைச் சிங்கையாரியச் சக்கரவர்த்தி
2. குலசேகர ,, ,,
3. குலோத்துங்க ,, ,,
4. விக்கிரம ,, ,,
5. வரோதய ,, ,,
6. மார்த்தாண்ட ,, ,,
7. குணபூசன ,, ,,
8. வீரோதய ,, ,,
9. செயவீர ,, ,,
10. குணவீர ,, ,,
11. கனகசூரிய ,, ,,

இக்காலப்பகுதியில் தமிழ் இராச்சியம் மிகுந்த வலியோடு செல்வமும் செழிப்புமோங்கிக் கீர்;த்தியோடு விளங்கியது. மன்னார் சிலாபத்துறை முதலிய இடங்களில் நடந்த முத்துக் குளிப்பினால் செல்வங்கொழித்தது. பெரிய கடற்படை யொன்று ஆரியச்சக்கரவர்த்திகையில் இருந்தது. அதனால் ஈழத்தமிழர், மலையாளம் முதலிய இடங்களுக்குச் சென்று வாணிகம் வளர்த்து வந்தனர். இத்தகைய செவ்வி வாய்ந்த ஈழத்தமிழ்நாட்டிற்குப் பலர் பிற நாடுகளிலிருந்ததும் வந்தனர். அவருள் இபுன் பத்தூத்தா, மார்க்கோ போலோ என்போர் குறிப்பிடத்தக்கவர். இவ்வரசனையும் அரசினையும் பற்றி இபுன்பத்தூத்தா கூறுஞ் செய்திகள் கவர்ச்சிகரமானவை. “இவ்வரசனின் பெயர் ஆரியச்சக்கரவர்த்தி@ கடற்படை வலி கொண்டவன்@ மலையாளத்திலே யான் தங்கியிருந்த பொழுது இவன் நாவாய்கள், சிறியவும் பெரியவுமாக நூறுகப்பல்கள் நங்கூரமிட்டு;க் கெம்பீரமாய் அங்கு நின்றன@ அதிதிகளை உபசரிக்கும் அன்புசார்ந்த நெஞ்சினன்@ பாரசீகமொழியிலே வல்லுனன்@ அம்மொழியில் என்னுடன் உரையாடினான்@ எனக்கு நல்ல பரிசில்களை வாரிவாரியிறைத்தான். அவை மட்டுமோ, தன் இராச்சியத்தில் கிடைக்கும் திறமையான மு�

0 comments:

Post a Comment

 
Design by JP